விடுதலை - சிட்டுக் குருவி - பாரதியார் - கவிதை

by Geethalakshmi 2010-07-25 22:17:14

விடுதலை - சிட்டுக் குருவி - பாரதியார் - கவிதை


விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

சரணங்கள்

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னு மதுவின் சுவையுண்டு (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாததொர் கூடுகட் டிக்கொண்டு
முட்டை தருங்குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முண்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)

விடுதலை - சிட்டுக் குருவி - பாரதியார் - கவிதை
1950
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments