சங்கு - பாரதியார் - கவிதை

by Geethalakshmi 2010-07-25 22:25:43

சங்கு - பாரதியார் - கவிதை


செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திட லாமென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனித ரவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தி லெறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்.

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்.

சங்கு - பாரதியார் - கவிதை
2019
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments